Tuesday, July 5, 2011

வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி

எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய படம். படத்தை இன்னும் முழுசாக பார்க்கவில்லை. ஆனாலும், இந்த பாடல் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது.

முக்கிய காரணம் இருவர். ஹரிகரன் மற்றும் நா.முத்துக்குமார்.

பாடலின் வரிகள் அற்புதமாக இல்லை. அதாவது நா.முத்துக்குமாரின் மற்ற அற்புதமான பாடல் வரிகளைப்போல இல்லை. ஆனால், தாளம் இனிமையாக மெதுவாக செல்கிறது. மெதுவாக செல்லும் இந்த தாளம் தான் இந்த பாடலில் மிகப்பெரிய ப்ளஸ். மற்றும் ஹரிகரனின் குரல், இந்த பாடலுக்கு நச்சென பொருந்தி போகிறது. 'உயிரே உயிரே' பாடலில் கூட எனக்கு அவ்வளவாக அவர் குரல் பிடித்ததில்லை.

ஒரு முறை சென்னை மின்சார இரயிலில் சென்றுகொண்டிருந்த பொழுது நடந்தது. என் அருகில் சில கல்லூரி மாணவர்கள் அமர்ந்து சென்னை பாஷையில் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். எங்கள் இருக்கையில் எதிர்ப்பக்க மூலையில் இருவர் இந்த பாடலை தங்கள் கைப்பேசியில் ஏதோ ஒரு எஃப்.எம்.மில் இருந்து கசிந்து விட்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது. என் அருகில் இருந்தவர்கள் பேசியபேச்சில் என்னால பாட்டையும் முழுசாக கேட்கவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் என் அருகில் இருந்தவர்கள் தாங்கள் பேசுவதை குறைத்துக்கொண்டனர். பின் அப்படியே நிறுத்தியும் விட்டனர். எனக்கோ ஆச்சரியம். அந்த பாடலில் இருந்து "என் காதலும் என்னாகுமோ. உன் பாதத்தில் மண்ணாகுமோ" என்ற வரிகள் வரும் போது அவர்களும் தங்களை மறந்து கூடவே பாட ஆரம்பித்துவிட்டனர். எல்லோரையும் கரைத்துவிட்ட பாடலிது.

அப்புறம் சிற்சில விஷயங்கள் இந்த பாடலின் விஷுவலில் இருக்கும். உதா, நாயகி பால் குடித்துவிட்டு வந்த மீசையை பற்றி இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்வது, 'ஒன்றா, இரண்டா உன்னழகை பாட' என்ற இடத்தில் எடிட்டிங்.

'பெண்ணே என்னடி, உண்மை சொல்லடி' - சொல்லடி என்று இடத்தில் 'சொ' என்ற வார்த்தைக்கு முன் ஒரு 'ஸ்' வரும். 'உண்மை ஸ்சொல்லடி' என்று. இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

முக்கியமாக கவனித்து பாருங்கள். இந்த பாடல் தாளத்துடன் ஒட்டாது. சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசம் இருக்கும். பாடுபவரின் குரல் சில மைக்ரோ செகண்டுகள் delay ஆகும்.

இந்த பாடலின் interlude-ல் வரும் இசை பிரமாதம்.

கேட்டிராதவர்கள் கேட்டு பின் பாருங்கள், பார்த்தவர்கள் மீண்டும் பாருங்கள்.

பாடல்வரிகள்

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே... (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே)
(வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி?

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

(உன்னாலே)

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)

படம்: யாரடி நீ மோகினி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிகரன்

கானொளி


Monday, December 6, 2010

நினைத்து நினைத்து பார்த்தேன் - 7ஜி ரெயின்போ காலனி

7ஜி ரெயின்போ காலனி

இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களுமே ஸ்பெஷல் தான். இது யுவன் + செல்வா + நா.முத்துக்குமாரின் கூட்டனி. அட்டகாசமான பாடல்கள்.

இந்த பாடலின் ஆரம்ப இசைகோர்வை மட்டும் சுமார் 1 நிமிடங்கள் வரும். மேலும் இடையில் வரும் interlude-ம் அருமையான BGM. கேட்டுப்பாருங்கள். இந்த பாடலின் மைனஸ் என்று பார்த்தால், தமிழ் தெரியாத ஒருத்தர் தான் பாடியிருக்கிறார் என்று சுலபமாக அறிந்திட முடியும். ஆனால், தன் குரலால் அந்த மைனஸும் ப்ளஸ்ஸாக்கி விடுகிறார் ஷ்ரேயா...

இந்த பாடல் படத்தில் இரண்டு முறை வரும். இரண்டுமே சோகப்பாடல்கள். முதலில் காதலியின் மறைவை அடுத்து காதலன் உருக்கமாகப்பாடும் பாடல். பாடியது கே.கே. விரக்தியில் விளிம்பில், தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் காதலன், காதலியின் நினைவு அவனை கொல்ல, அவன் பாடுவதாய் எழுதியிருப்பார் நா.முத்துக்குமார்.

பின் சிலமுறை தற்கொலை முயற்சி செய்வான். ஒரு கட்டத்தில் காதலி அவன் முன் வந்து 'தற்கொலை எண்ணம் வேண்டாம். தற்கொலை செய்தால் என்னை பற்றின நினைவுகளும் அழிந்துவிடும். என் நினைவுடன் வாழ்' என்று புத்தி சொல்வதாய் அமைந்த பாடல் 'செல்லம்' ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல், இன்னொரு 'நினைத்து நினைத்து பார்த்தேன்'.

இரண்டு பாடலையும் அருகருகே வைத்து படித்து பார்த்தால் அர்த்தம் விளங்கும்.

"நாம் அமர்ந்து பேசிய மரங்களின் நிழல் உன்னை கேட்டால் எப்படி சொல்வேன்? உதிர்ந்து போன மலரை போலவா?" என்கிறான் அவன். "காலம் முழுவதும் சொல்லும், அந்த மலரின் வாசமாய்" என்கிறாள் அவள்.

"உடைந்து போன வளையல் பேசுமா?" என்கிறான் அவன். "அது தன் வண்ணங்களால் பேசும்" என்கிறாள் அவள்.

"உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் எங்கே?" என்கிறான் அவன். "உந்தன் கையில் கலந்திருக்கும்" என்கிறாள் அவள்.

"பேசிய வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்" என்கிறான் அவன். "அவை உனது பேச்சில் கலந்து இருக்கும்" என்கிறாள் அவள்.

"நீ பார்த்து போன பார்வைகள் எங்கே என்று கேள்வி கேட்கும்" என்கிறான் அவன். "அவை உன்னுடனே இருக்கும்" என்கிறாள் அவள்.

"ஒரு தருணம் எதிரின் தோன்றுவாய் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்" என்கிறான் அவன். "ஒரு தருணம் என்ன? உன்னுள் எப்பொழுதும் இருக்கிறேன்" என்கிறாள் அவள்.

முதல் பாடலின் காதலனால் கேட்கப்படும் கேள்விக்கு இரண்டாம் பாடலில் விடையாக காதலி பாடுவதாக அமைந்திருக்கும் இந்த பாடல், என் ஆல்-டைம் ஃபேவரைட். இரண்டு பாடலையும் அருகருகே இருந்தால் உங்களுக்கும் புரியும்.

கே.கே.ஷ்ரேயா கோஷல்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
(நினைத்து நினைத்து பார்த்தேன்)(நினைத்து நினைத்து பார்த்தால்)
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்…
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்…
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
(நினைத்து நினைத்து பார்த்தேன்)(நினைத்து நினைத்து பார்த்தால்)
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழியும் என்னை மறக்குமா…
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்

கே.கே.



ஷ்ரேயா கோஷல்



நன்றி: Truth

Yuvan Live in Cencert: Chennai-யில் ஷ்ரேயா கோஷல் பாடியது...
From 6:00

Wednesday, December 1, 2010

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே - ஜூலி கணபதி

இந்த பாடல் எனக்கு அறிமுகமானது ஒரு நண்பன் மூலமாக. அவனும் இதை போன்ற பாடல்களின் ரசிகன். முதல் முறை கேட்ட போது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால், கேட்க கேட்க மிகவும் பிடித்துப்போன பாடல்.

இந்த பாடலின் விஷுவல் பார்த்ததும், படத்தில் இந்த பாடல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தின் பெயர் ஜூலி கணபதி. படத்தை இன்னும் பார்க்கவில்லை. மழைக்காலத்தில் காரோட்டும் ஒருவர் காரின் வானொலியில் பாடல் பாடுவதாக அமைந்த பாடல். வெளியே பெய்யும் மழையும் அதன் சத்தமும்(!) காருக்குள் புகாதபடி தனி ஆவர்த்தனம் செய்யும். படத்தில் இந்த பாடலுக்கு ஒன்றும் வேலையில்லை என்றாலும், பாடல் முடியும் போது நாயகன் செல்லும் கார் விபத்தில் முடியும்.

இந்த பாடலின் மிகப்பெரிய பலம், ஷ்ரேயா கோஷல். இளையராஜாவின் கேட்ட பிறகு அவரின் குரலுக்கு ரசிகனாகி போனேன். என்ன! ஒரே பிரச்சினை...தமிழ் உச்சரிப்பு. "என்னை பிடித்த நிலுவ்வு", "மனது வள்த்த சோலையில்", போன்றவற்றை சகித்துக் கொள்ள வேண்டும்...

காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

இந்த வரிகளை எப்படி எடுத்துக் கொள்வது?

1. காதல் (என்பது) நோய்க்கு மருந்து தந்து நோயை கூட்டுமா?

இல்லை

2. இதற்கு முந்தைய வரிகளை எடுத்து கொண்டு, நிலவானது காதல் என்னும் நோய்க்கு மருந்தை தந்து அந்த நோயை கூட்டும்


மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்


மேகத்தை போன்ற மோகமா? இல்லை, மோகத்தை வளர்த்து விட்டு கலைந்து போகும் மேகம் போலவா?



பாடல் வரிகள்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த பாடல்)

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.
(எனக்குப் பிடித்த பாடல்)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

(எனக்குப் பிடித்த பாடல்)